Pages

Friday, March 25, 2011

சிந்திக்கத் தூண்டும் மார்க்கம் இஸ்லாம்

நெல்லை இப்னு குலாம்ரசூல்
உலகில் வாழும் மனிதர்கள் பல்வேறு மதங்களை மார்க்கங்களைப் பின்பற்றி வருகின்றனர். அவர்கள் பின்பற்றும் அம்மதங்களின் அடிப்படை வேதங்களாகவோ புராணங்களாகவோ மனிதர்கள் சிலரின் வழிகாட்டுதல்களின் தொகுப்பாகவோ எல்லாமே இயற்கையாகவே நிகழ்ந்து இயற்கையின் நியதிப் படி முடிவுறுகின்றன என்ற சித்தாந்தத்தைக் கொண்டதாகவோ இருக்கின்றன.
நம்மைப் படைத்த இறைவன் ஒருவன்தான் என்பதில் பல்வேறு மதத்தார் ஒரே கருத்தில் இருந்தாலும் கூட அவர்கள் சார்ந்திருக்கும் வேதங்கள் புராணங்கள் இக்கருத்தை நன்றாக வலியுறுத்தியும் கூட வழிநடாத்திச் செல்லும் மதகுருமார்கள் பண்டிதர்கள் முன்னோடிகள் மார்க்க அறிஞர்கள் செய்யும் போதனைகளால் அம்மார்க்கத்தைப் பின்பற்றக்கூடிய மக்கள் அவர்கள் சார்ந்துள்ள சமயங்களின் அடிப்படையையே மறந்து புதிய மாற்றமான புகுத்தப்பட்ட கொள்கைகளைப் பின்பற்றுகின்றனர்.
இதனால் ஓரிறைக் கொள்கை மறைந்து ஒன்றுக்கு மேற்பட்ட பல்கிப் பெருகிய பல தெய்வங்களின் வருகையும் அத்தெய்வங்களின் கற்பனை செய்யப்பட்ட உருவகங்களுக்கு பூஜை புனஸ்காரங்கள் வழிபாடுகள் என்ற பெயரால் புனையப்பட்டவைகள் நடைமுறையில் இருப்பதையும் நாம் காண்கிறோம்.
நடைமுறை வணக்க வழிபாடுகள் எவற்றுக்குமே (ஓரிறைக் கொள்கைக்கு முரணான) எந்த அடிப்படையோ அல்லது ஆதாரங்களோ கிடையாது. ஆகவே சிந்தித்து அம்மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லாமல் ஆகிவிடுகின்றது. இந்நிலையில் படைத்த வல்லோன் அல்லாஹ் பொருந்திக்கொண்ட ஏற்றுக் கொண்ட மார்க்கம் என அருள்மறையில் கூறுகையில் இப்படிக்கூறுகிறான்:
''நிச்சயமாக தீனுல் இஸ்லாம்தான் அல்லாஹ்விடத்தில் (எற்றுக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்.'' (அல்குர்ஆன் 3:19)
மற்றொரு வசனத்தில்,
இன்னும் இஸ்லாம் அல்லாததை மார்க்கமாக எவரேனும் தேடினால் அப்போது அவரிடமிருந்து (அம்மார்க்கம்) அங்கீகரிக்கப் படவே மாட்டாது. மேலும் மறுமையில் அவர் நஷ்டமடைந்தோரில் இருப்பார். (அல்குர்ஆன் 3:85).
மேற்கூறிய வசனங்கள் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளும் மார்க்கம் இஸ்லாம் மட்டும்தான் என்பதையும் இஸ்லாம் அல்லாத பிற மதங்கள் சமயங்கள் பகுத்தறிவு சித்தாந்தங்கள் பெரும்பான்மை சமுதாயத்தாரால் பின்பற்றப்பட்ட போதிலும் அவைகள் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப் படாதவைகள் என்பதற்கு அருள் மறை கூறும் அழகிய சான்றுகளாகும்.
சிந்திக்கும் திறன்:
எதையும் சிந்தித்துச் செயலாற்றும் மனிதன் தான் சார்ந்திருக்கும் ஆன்மீக நெறிவழி சரிதானா? எனச் சிந்திப்பது மிக அரிது. பிற கால்நடைகள் விலங்குகளுக்கு வழங்கப் படாத விசேஷ அறிவு தனக்கு வழங்கப்பட்டிருக்கிறது எனத் தம்பட்டமடிக்கும் மனிதன் தன் ஆறாவது அறிவான பகுத்தறிவை தான் சார்ந்திருக்கும் மதம் சரியானதா? அறிவுப்பூர்வமானதா? ஆதாரப்பூர்வமானதா? அடிப்படை என்ன? அதன்படி நடந்தால் இம்மை மறுமை நலனைத் தருமா? நாம் ஏன் இந்த மதத்தைப் பின்பற்றுகிறோம்? எனச் சிந்திப்பதற்குப் பயன்படுத்துவதேயில்லை.
கண்ணால் பார்த்து உணரும் பார்வையறிவு, காதால் கேட்டு உணரும் கேள்வியறிவு, நாவால் சுவைத்துணரும் ருசியறிவு, தோலினால் உணரும் தொடு அறிவு, மூக்கினால் நுகர்ந்து அறியக்கூடிய நுகர் அறிவு இப்படி அல்லாஹ்வின் படைப்பினங்கள் அனைத்துக்கும் இருக்கக்கூடிய ஐந்தறிவினைப் பட்டியல் போட்டு தனக்கு வழங்கப்பட்டிருக்கும் பகுத்தறிவைப் பற்றிப் பீற்றும் போது நல்லது எது? கெட்டது எது? எனத் தேர்வு செய்யும் திறனை சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதாக அங்கலாய்க்கிறான். தனக்குத் தேவையான உலகாசை சம்மந்தமானவற்றைத் தேர்வு செய்வதில் மனிதன் காட்டும் அக்கறையும் அபிலாஷையும் ஆன்மீகத்தில் துளியளவும் காட்டுவதில்லை. அவன் சார்ந்திருக்கும் மதத்தில் ஒன்று, ஆகும் என்றோ ஆகாது என்றோ தீர்மானிக்கும் முழு அதிகாரமும் மதகுருமார்கள் கையில் இருந்தது என்பதற்கு கீழ் காணும் அருள்மறை வசனமும் அதன் விளக்கவுரையாகிய நபிமொழியும் சான்றுகளாகும்.
யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் எள்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! (சத்தியத்தை விட்டும் இவர்கள்) எங்கே திருப்பப்படுகிறார்கள்? அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக் கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை - அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன். (அல்குர்ஆன் 9:30-31).
அருள்மறையின் இவ்வசனங்கள் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் விளக்கம் கேட்ட அதீபின் ஹாத்திம் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு தங்கள் பாதிரிகள் மதகுருக்கள் ஆகுமாக்கி வைத்ததை ஏற்றும் அவர்கள் தடுத்ததை விலக்கியும் வந்த சமுதாயத்தாரின் இச்செயலையே அல்வாஹ் அவர்கள் அல்லாஹ்வையன்றி தங்கள் பாதிரிகளையும் சந்நியாசிகளையும் தெய்வங்களாக்கிக் கொண்டனர் எனக் கூறுகிறான் என்று விளக்கமளித்தார்கள் என்பதை நபிமொழிகளில் காணமுடிகிறது. ஆகவே சமுதாயம் ஆன்மீகத் துறையில் சிந்தித்து செயல்படவில்லை என்பது நன்கு விளங்குகிறது.
சிந்திக்கத் தடை:
தான் சார்ந்திருக்கும் மதம் கூறும் கோட்பாடுகள் சரியா?. அறிவுப்பூர்வமானவையா? ஏன ஆய்வு செய்தார் ஒரு கிறிஸ்தவ விஞ்ஞானி. அவருடைய அறிவியல் ஆய்வின் தீர்வு உலகம் உருண்ட வடிவத்தில் இருப்பதாகவும் அது சுழல்வதால் இரவு பகல் மாறி மாறி வருகிறது எனக் கூறினார். அவர்தான் கலீலியோ. கிறிஸ்தவ மதச்சித்தாந்தமோ உலகம் தட்டையானது எனக்கூறியது. மதச்சித்தாந்தத்துக்கு மாற்றமாக ஆய்வின் தீர்வை அறிவித்த கலீலியோ மதகுருமார்களால் பாதிரிகளால் கண்டிக்கப்பட்டார். இறுதியில் கல்லெறிந்து கொல்லும் தண்டனைக்குள்ளாகி உயிர் நீத்தார்.
இந்து மதத்தார் போற்றும் பேணும் சட்ட நூல்களில் ஒன்றாகிய மனுஸ்மிருதி மார்க்க ஞானம் (வேதத்தைப் பற்றிய கல்வி) ஒருசாரார்க்கு மட்டுமே சொந்தம். அவர்களைத் தவிர வேறு சாரார் எவரும் கற்ககூடாது எனத்தடை விதிப்பதுடன் பிறப்பால் தாழ்ந்த பிரிவினர் வேத வசனங்களை காதுகொடுத்துக் கேட்கவும் கூடாது என்று பிரகடனம் செய்கிறது. மீறி கேட்பார்களேயானால் அவர்களின் காதுகளில் ஈயத்தைப் பழுக்க காய்ச்சி ஊற்ற வேண்டுமென்ற தண்டனையை நிறைவேற்ற உத்திரவிடுகிறது. இப்படி கல்வியறிவைப்பெற கற்றபடி செயல்பட சிந்திக்க செயலாற்ற என எல்லா நிலைகளின் வாசல்களையும் அடைத்து ஒருசாரார் கூறும் கருத்துக்களே உன்னதமானவை. மறுக்கமுடியாதவை. பின்பற்றத்தக்கவை என பிதற்றும் பித்தலாட்டங்களைப் பார்க்கிறோம். சிந்திக்கத் தடைவிதிக்கும் இம்மதங்கள் மனித சமுதாயத்தாரில் பெரும்பாலும் பின்பற்றப் பட்டு வந்தாலுங்கூட சிந்திக்கத்தூண்டும் அறிவுப்பூர்வமான ஆதாரங்களைப் பெற்ற அல்லாஹ்வின் அங்கீகாரம் கிட்டிய மார்க்கமான இஸ்லாம் சிந்திக்கத் தூண்டுகிறதா? என ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
சிந்திக்கத் தூண்டுகிறது:
இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றாகிய குர்ஆன் அல்லாஹ்வினால் அருளப்பட்டது. அருள்மறை சிந்திக்கக்கூறி உலகோரை அழைக்கும் வசனங்கள் ஏராளம். ஏராளம். ஓரிரு சான்றுகளைக் காண்போம்.
மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)
நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (அல்குர்ஆன் 54:17)
இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பர்கள்.) (அல்குர்ஆன் 25:73).
மேற்கூறிய அருள்மறை வசனங்கள் சிந்திக்கத் தூண்டுவதுடன் ஒரு படிப்பினையையும் நமக்குக் கற்றுத்தருகிறது. அதாவது எந்த ஒரு கருத்தும் எவரால் சொல்லப்பட்டாலும் அக்கருத்து சரியானதுதானா? என்பதை சிந்தித்து தீர்மானிக்க கூறுகிறது. அருள்மறை வசனங்கள் அல்லாஹ்வினால் அருளப்பட்டதாக இருந்தாலும் அதனையும் சிந்தித்துச் செயல்படக்கூறும் வியப்பை (அல்குர்ஆன் 25:73)ப் பார்த்தோம். சொல்பவர் யார்? என்று பார்க்காமல் சொல்லும் கருத்து சரிதானா? என்ற உயரிய சித்தாந்தம் இங்கு நிலைநாட்டப் படுகின்றது.
முரண்பாடற்றது:
அருள்மறை வேதங்கள் மனித வாக்குகள் அல்ல. படைத்த இரட்சகனின் பரிசுத்தக் கருத்துக்கள் என்பதற்கும் மனிதர்களின் உளறலைப்போல் முன்னுக்குப் பின் முரணாகத் திகழாமல் முரண்பாடற்று விளங்குவதும் அருள்மறைக் குர்ஆன் அல்லாஹ்வினால் தான் அருளப்பட்டது என்பதற்கு அருமையான சான்றுகளாகும். அல்லாஹ்வே வேத நூலாகிய அருள்மறைக் குர்ஆனை அருளி அதனைப் பிற வேதங்கள் மனிதக் கரங்களால் மனோஇச்சைக்கு ஆளாகி மாசுபடுத்தப்பட்டு மாற்றங்கள் செய்யப்பட்டதைப் போல எவிவித மாற்றங்களுக்கும் ஆளாகாமல் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறான் என்பதை வல்லோன் அல்லாஹ் வான்மறையில் கூறுவதைப் பாருங்கள்:
அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 4:82).
நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.(அல்குர்ஆன் 15:9).
பிற வேதங்கள் அது அருளப்பட்ட மூல மொழியில் எவ்வாறு அருளப்பட்டதோ அவ்வாறு இல்லாமல் பரிமாற்றங்கள் செய்யப்பட்டு வேதவசனங்களை நீக்கியும் மனித கருத்துக்களைச் சேர்த்து இடைச்செருகல் செய்தும் கூட்டியும் குறைத்தும் மாசுபடுத்தப்பட்டு முரண்பாடுகளின் சிகரத்தில் இருப்பதை நம்மால் காணமுடியும். ஏனவே வல்ல அல்லாஹ் அருள்மறைக் குர்ஆனை பிற வேதங்களை உண்மைப்படுத்தக் கூடியதாக அருளினான்.
(நபியே) முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை அவன்தான் (அல்லாஹ்) உம்மீது இறக்கியருளினான். இவ்வேதம் இதற்கு முன்னுள்ள (வேதங்கள்) அனைத்தையும் உண்மைப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. (அல்குர்ஆன் 3:3).
இஸ்லாத்தில் கல்வியின் மகிமை:
மனிதனின் சிந்தனை சக்திக்கு உறுதுணையாய் அமைவது கல்வியறிவே. இக்கல்வியறிவு இஸ்லாத்தில் முக்கிய கடமைகளில் ஒன்றினைப் போல் மிக வலியுறுத்தப் படுகின்றது. அல்லாஹ் முதன்முதலில் மனிதனைப் படைத்துவிட்டு அவனுக்கு கல்வியறிவைப் புகட்டியதை அருள்மறை கூறுவதைக் காணுங்கள்.
(ஆதமைப் படைத்து) ஆதமுக்கு (பொருட்களின்) பெயர்கள் அனைத்தையும் கற்றுக்கொடுத்து பின்னர் அவற்றை வானவர்களிடம் எடுத்துக்காட்டி அவர்களிடம் நீங்கள் உங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருப்பின் இவற்றின் பெயர்களை எனக்குத் தெரிவியுங்கள் என (அல்லாஹ்) கூறினான். (2:31). அல்லாஹ் ஆதமுக்கு பொருட்களின் பெயரைக் கற்றுக் கொடுத்துவிட்டு மலக்குகள் மூலம் இஸ்லாமிய ஒழுக்கமாண்புகளில் ஒன்றாகிய ஸலாத்தைக் கற்றுக் கொடுத்ததைக் கீழ் காணும் நபிமொழி உணர்த்துகிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹுத்தஆலா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் படைத்தபொழுது அவர்களுக்கு கூறினான்: ஆதமே நீர் சென்று அங்கு அமர்ந்திருக்கும் மலக்குகளின் கூட்டத்தார்க்கு ஸலாம் கூறுவீராக. அதற்குப்பதிலாக அம்மலக்குகள் உமக்கு வழங்கும் பதிலைச் செவிமடுப்பீராக. நிச்சயமாக அதுவே உமக்கும் உம் சந்ததியினர்க்குமுரிய பதிலா(ஸலாத்தின்)கும். அதன்படி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அம்மலக்குகளிடம் சென்று உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாவதாக எனக்கூற அதற்கு அம்மலக்குகள் அஸ்ஸலாமு அலைக்க வரஹ்மத்துல்லாஹி உங்களின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் அவனின் கருணையும் உண்டாவதாக என்று கூறினார்கள். வரஹ்மத்துல்லாஹி என்ற சொல்லைத் தம் பதிலில் மலக்குகள் அதிகப்படுத்தினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)
குர்ஆனின் முதல் வஹிச் செய்தி:
"நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் துவக்கத்தில் இறைச்செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று தெளிவாக இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களின் விருப்பமாயிற்று.
ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்தார்கள். தங்களின் குடும்பத்தாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் (அங்கே தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த நாள்களுக்கான உணவைத் தம்மோடு கொண்டு செல்வார்கள். (அது முடிந்ததும்) மீண்டும் (தங்களின் துணைவியார்) கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் திரும்புவார்கள். அதே போன்று பல நாள்களுக்குரிய உணவைக் கொண்டு செல்வார்கள்.
இந்த நிலை ஹிரா குகையில் அவர்களுக்கு சத்தியம் வரும் வரை நீடித்தது. (ஒருநாள்) ஒரு வானவர் அவர்களிடம் வந்து, 'ஓதும்' என்றார். அதற்கவர்கள் 'நான் ஓதத் தெரிந்தவனில்லையே!' என்றார்கள்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்நிலையைப் பின் வருமாறு விளக்கினார்கள்."அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டியணைத்தார். பிறகு என்னைவிட்டுவிட்டு மீண்டும் 'ஓதும்' என்றார். (அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன்.
இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டி அணைத்து என்னை விட்டுவிட்டு மீண்டும் 'ஓதும்' என்றார். (அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையும் கட்டி அணைத்து விட்டுவிட்டு, 'படைத்தவனாகிய உம்முடைய இரட்சகனின் திருப்பெயரால் ஓதும்! அவனே மனிதனை 'அலக்'கில் (கருவளர்ச்சியின் ஆரம்பநிலை) இருந்து படைத்தான். ஓதும்! உம்முடைய இரட்சகன் கண்ணியம் மிக்கவன்' என்றார்." மேலும், ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறினார்.
பிறகு இதயம் படபடத்தவர்களாக அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) குவைலிதின் மகள் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா விடம் நடந்த செய்தியைத் தெரிவித்துவிட்டுத் தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என தாம் உறுதியாக அஞ்சுவதாகவும் கூறினார்கள்.
அப்போது கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் 'அவ்வாறு கூறாதீர்கள்; அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள்; வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகிறீர்கள்' என்றார்கள். (அல்குர்ஆன் 96:1-3) வசனங்களின் பினனணி. (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி ஹதீஸ் எண்:3.)
வல்ல அல்லாஹ் படைப்பின் துவக்கத்தைக் கல்வியில் ஆரம்பித்தது போல் மனித வாழ்வின் ஒட்டுமொத்த அழிவு நாளாகிய கியாமநாளின் அடையாளமாகவும் கல்வியை ஆக்கியிருப்பதை கீழ்காணும் நபிமொழி உணர்த்துகிறது. கல்வி அகற்றப்பட்டு விடுவதும், அறியாமை மலிந்துவிடுவதும், விபசாரம் அதிகரித்து விடுவதும், மது அருந்துதல் அதிகரித்து விடுவதும், ஐம்பது பெண்களுக்கு - அவர்களை நிர்வகிக்க ஒரே ஆண் என்ற நிலைமை வரும் அளவுக்குப் பெண்கள் மிகுந்து, ஆண்கள் குறைந்துவிடுவதும் மறுமை நாளின் அடையாளங்களில் அடங்கும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி :5231)
இவ்வாறு கல்வியின் இன்றியமையாமை பற்றி இஸ்லாம் கூறுவதுபோல் எந்த மதமும் கூறவில்லை என அறியலாம். இஸ்லாமிய வரலாற்றில் முதல்போராகிய பத்ர் போர் இறை நிராகரிப்பாளர்களுக்கும் இறை விசுவாசிகளுக்கும் இடையில் நிகழ்ந்தது. இப்போரில் அல்லாஹ் இறை விசுவாசிகளுக்கு வெற்றியை நல்கினான். முஸ்லீம்களால் சிறை பிடிக்கப்பட்ட குறைஷிய முஷ்ரிக்குகள் கல்வியறிவு இல்லாத முஸ்லீம்களில் ஒரு பகுதியினர்க்கு கல்வி கற்பித்துவிட்டு தம்மை சிறையிலிருந்து விடுவித்துக்கொண்டு விடுதலை பெற்ற செய்தியை நபிமொழிகளில் நம்மால் காணமுடிகிறது.
பகுத்தறிவுப் பாசறை இஸ்லாம்:
அல்லாஹ் ஆட்சி அதிகாரங்கள் வழங்கி கண்ணியப் படுத்திய ஒருவன் நன்றிகொன்றவனாக இறை விசுவாசி ஒருவரிடம் செய்த தர்க்கத்தையும் அவ்விசுவாசி வழங்கிய பகுத்தறிவுப் பூர்வமான பாங்கான பதிலை அருள்மறை அழகுடன் விவரிப்பதைப் பாருங்கள்.
அல்லாஹ் தனக்கு ஆட்சியைக் கொடுத்ததற்காக (நன்றி கொன்ற)அவன் அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீமிடம் அவரின் இரட்சகனைப் பற்றித் தர்க்கித்ததை (நபியே) நீர் பார்க்கவில்லையா?. அதுசமயம்; இப்ராஹீம் கூறினார்; "எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு (இறைவன்)" என்று. அதற்கவன், "நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும் படியும் செய்கிறேன்" என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்; "திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில்உதிக்கும்படிச் செய்!" என்று. (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர்வழி காண்பிப்பதில்லை. (அல்குர்ஆன் 2:258).
விவாதம் புரிவதில் விசுவாசி காட்டவேண்டிய நிதானம் நளினம் பகுத்தறிவு மிளிரும் வினா இவை இங்கே நாம் படிப்பினை பெறும் விஷயங்கள். மார்க்கம் என்ற பெயரால் இன்று நிகழ்த்தப்படும் விவாதங்களில் வரைமுறை மீறி வாய்க்கு வந்ததை கூறிவிட்டு வார்த்தை தவறி கவனக்குறைவாக வந்து விட்டது எனச் சமாளிப்பது இவை இன்றைய நடைமுறைகள்.
அறிவியல் ரீதியாக:
இன்றைய விஞ்ஞான உலகில் புத்தம் புதிய கண்டுபிடிப்புகள் உலாவந்து கொண்டிருக்கும் வேளையில் பின்பற்றும் மார்க்கம் அறிவியலுக்கு அப்பாற்பட்டதாக முரணாக அமைந்து விடுமானால் எல்லாப் பிரச்சினைகளுக்கும் எல்லா காலத்துக்கும் பொருந்தும் மார்க்கம் எனச் செய்யும் பிரகடனங்கள் பிசுபிசுத்துவிடும். இஸ்லாம்கூறும் எந்த ஒரு தீர்வும் அறிவியல் முடிவுகளுடன் பொருந்திப்போவது நம்மை பிரமிக்க வைக்கிறது. அறிவியல் தீர்வுகள் இஸ்லாமியச் சித்தாந்தத்துடன் முரண்பட்டால் அறிவியல் தீர்வுதான் மாற்றம் பெறுகிறது மறுபரிசீலனைக்குள்ளாகிறது என்பதை நாம் உணரவேண்டும்.அறிவியல் ரீதியாக அருள்மறை அன்றே கூறிய விஷயங்கள் இன்று உண்மைப் படுத்தப்பட்டதை ஓரிரு சான்றுகளில் காண்போம்.
சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லா கோள்களும் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. (அல்குர்ஆன் 36:40)
கோளங்கள் விண்மீன்கள் நட்சத்திரங்கள் வான வெளியில் தத்தம் பாதைகளில் மிதந்து சுழன்று கொண்டிருப்பதை இன்றைய அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்து கூறுகின்றனர்.
அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது, அதை அவை மீறமாட்டா. (அல்குர்ஆன் 55:19-20).
சங்கமிக்கும் இருகடல்களின் நீர் ஒன்றோடொன்று சேர்ந்து விட்டதுபோல் நம் கண்ணுக்குப் புலப்பட்டாலும் அவற்றின் சுவை நிறம் தன்மை அடர்த்தி ஆகியவற்றின் வேறுபாட்டால் அவ்விரு கடல்களின் இடையில் வெளிப்பார்வைக்குத் தெரியாத ஒரு மெல்லிய திரை உள்ளதை இன்றைய அறிவியல் தீர்வு உறுதிப் படுத்துகிறது. நபி மொழி ஒளியில் அறிவியல் விந்தைகளை அலசுவோமேயானால் உங்களில் எவருடைய பானத்திலாவது ஈ விழுந்துவிட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) அமிழ்த்தட்டும்; பிறகு அதை வெளியே எடுத்துப் போட்டு விடட்டும். ஏனெனில், அதன் இரண்டு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் இருக்கிறது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி :3320 அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு)இவ்வாறு அறிவியல் ரீதியிலான தீர்வுகள் இஸ்லாத்தின் கோட்பாடுகளில் ஒவ்வொன்றையும் இன்று உறுதிப் படுத்திக் கொண்டிருக்கின்றன.
சிந்திப்பதில் தடையில்லை தீர்வு செய்வதில் வரையறை:
இஸ்லாமியச் சித்தாந்தங்கள் சிந்திப்பதற்கு எப்பொழுதும் தடை விதித்ததேயில்லை. மாறாக சிந்தித்துப் பெரும் தீர்வில் வரையறை உள்ளது. அவைகளில் சிலவற்றை இங்கு ஆய்வு செய்வோம். அருள்மறை வசனம் கூறும் கூற்று இதோ: (இப்ராஹீம் தீக்கிடங்கில் எறியப்பட்டவுடன்) "நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு!" என்று நாம் கூறினோம். (21:69).
ஏகத்துவக் கருத்தை எடுத்துக்கூறிய இறைத்தூதர் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இணைவைப்பாளர்களால் நெருப்புக் கிடங்கில் வீசப்பட்டதும் அல்லாஹ் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களப் பாதுகாக்க எரியும் நெருப்பின் சுடக்கூடிய தன்மையை மாற்றி அதனை இதமளித்து இடரிழைக்காத தன்மையை வழங்குவதாக அல்லாஹ் மாற்றும் நிலையை மேற் கூறிய வசனம் கூறுகிறது. இதனைச் சிந்தித்துப் பார்த்தால் நம் பகுத்தறிவு சுடும் நெருப்பு இதமளிக்குமா? என்ற வினாவுடன் ஏற்றுக் கொள்ள மறுக்கும். ஆனால் இத்தன்மையை மாற்றியதாக யார் கூறுகிறார்? என்று பார்த்தால் நம்மைப் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல அல்லாஹ் அந்நேரத்தில் சுடும் நெருப்புக்கு இட்ட உத்தரவு என்பதை விளங்கிக் கொண்டால் ஏற்றுக் கொள்வதில் எந்த சிரமும் இல்லை. மற்றொரு அருள்மறை வசனத்தின் கூற்று இதோ: உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்" என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலைபோன்று ஆகிவிட்டது. (26:63)
கைத்தடியால் கடலில் அடித்ததால் கடல் பிளந்து மலைபோல் குவிந்து நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம்கூட்டத்தாருடன் அதனைக் கடந்து செல்ல வழிவிட்டது என்ற இவ்வசனத்தின் படியுள்ள செய்தியை நம் பகுத்தறிவு இதனை ஏற்றுக் கொள்ள மறுக்கும். ஆனால் கைத்தடியினால் கடலில் அடியுங்கள் என உத்திரவிட்டது அக்கடலைப் பிளந்து வழிவிட வைத்தது வல்லஅல்லாஹ்தான் என்பதைப் புரிந்து கொண்டால் பிரச்சினைக்கு இடம் இல்லாமல் ஆகிவிடுகின்றது. இதுபோன்று அருள்மறை ஒளியில் இன்னும் சில நிகழ்வுகளைக் காணலாம். நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அறுத்துப் பலியிட தம் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களை அழைத்துச்சென்றது. நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தந்தையின்றிப் பிறந்தது. இப்படி நிறைய நிகழ்வுகள் நம் பகுத்தறிவுக்கு அப்பற்பட்டதாக இருந்தாலும் இக்கூற்றை படைத்த அல்லாஹ் கூறுகிறான். ஆகவே அல்லாஹ் எப்படி நமக்கு கூறுகிறானோ அதை சிந்தித்த பின் அப்படியே ஏற்றுக் கொள்வது ஈமானிய உறுதியை மேலும் வலிமைப்படுத்தும்.
ஹதீஸ்களின் அடிப்படையில் சில நிகழ்வுகளை இனி அலசுவோம். உங்கள் மனதில் உள்ளதை நீங்கள் வெளிப்படுத்தினாலோ அல்லது அதை நீங்கள் மறைத்து வைத்தாலோ அதைப்பற்றி அல்லாஹ் உங்களை விசாரிப்பான் (2:284) என்ற அருள்மறை வசனம் இறங்கிய போது நபித்தோழர்கள் இதனை மிகச் சிரமமாக எண்ணினர். எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் திருத்தூதரே எங்கள் மீது தொழுகை ஜிஹாது நோன்பு தர்மம் ஆகிய பணிகள் இயன்ற அளவு செய்ய பணிக்கப்பட்டதும் அதனை நாங்கள் செய்து வருகிறோம். இப்பொழுது தாங்கள் மீது இவ்வசனம் இறங்கியுள்ளது. இதனைச் செய்ய நாங்கள் சக்தி பெறவில்லை எனக்கூறினர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்களுக்கு முன்பு வேதங்கொடுக்கப்பட்ட இருசாரார் (யூத கிறிஸ்தவர்கள்) கூறியது போன்று நாங்கள் செவிமடுத்தோம் மாறுசெய்தோம் எனக்கூற நாடுகிறீர்களா?. அவ்வாறல்லாமல் நாங்கள் செவிமடுத்தோம் கட்டுப்பட்டோம் எனக்கூறுங்கள். எங்கள் இரட்சகனே உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம். உன்னிடமே எங்களின் மீட்சியுள்ளது என பிரார்த்தியுங்கள் எனக்கூற நபித்தோழர்கள் அவ்வாறே ஏற்றுக்கொண்டு பிரார்த்தித்ததும் அல்லாஹ் அருள்மறையின் இவ்வசனத்தை இறக்கினான்.
அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்;) "எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (2:286).
இறைத்தூதர் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன்படிச் செயல்பட இந்த ஹதீஸ் கூறுகிறது. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லீம்)
மற்றொரு ஹதீஸ் ஹஜருல் அஸ்வத் கல் பற்றி கூறுவதைப் பாருங்கள். உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவதைக் கண்டேன். அவர்கள் அந்த (ஹஜருல் அஸ்வத்) கல்லை நோக்கி நீ ஒரு கல். உன்னால் எந்த பயனையும் தரமுடியாது. நீ எத்தகைய தொல்லையும் அளிக்க இயலாதது. உன்னை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முத்தமிடுவதை நான் கண்டிராவிட்டால் நான் உன்னை (ஒருபோதும்) முத்தமிட்டிருக்க மாட்டேன் எனக் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஹாஃபிஜ் பின் ரபீஆ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி முஸ்லீம்).
இதுபோன்றே ஒளு எடுக்கத் தண்ணீர் இல்லாத போது செய்யும் தயம்மம் காற்று பிரிந்து விட்டால் அம்மறைவிடத்தை சுத்தம் செய்யாமல் முறிந்த ஒளுவை மீண்டும் செய்வது போன்ற சில அமல்கள் நமது பகுத்தறிவிற்கு அப்பாற்பட்டதாக இருப்பினும் உத்தம திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்வாறு செய்து காட்டினார்கள் என்பதால் அதை அப்படியே ஏற்றுக் கொண்டு அமல் செய்வதே இறைப்பொருத்தத்தைப் பெற்றுத்தரும்.
பகுத்தறிவைப் பெறாத படைப்பினங்கள் பெற்றுள்ள சிறந்த அறிவு பகுத்தறிவு என்பது ஒரு காரியத்தைச் செய்யும்போது அது நமக்கு பயனளிக்குமா? தீங்கிழைக்குமா? என பிரித்துப் பார்த்து இம்மை மறுமை நலன்களை நாடிச் செய்தால் பகுத்தறிவில் நிறைய பலன்களுண்டு. ஆனால் பகுத்தறிவு வழங்கப்பட்ட மனிதன் அதனைத் தவறாக துஷ்பிரயோகம் செய்கிறான். மது மனிதனின் மதியை மயக்கி அவனை பிறர்கண்டு நகைக்கும்படி செய்துவிடும் என்ற முடிவை நன்கு தெரிந்திருந்தும் மது அருந்துகிறான். பிறர் பொருளைத் திருடுபவன் அமானித மோசடி செய்பவன் அதனை இழந்து தவிப்பவன் படும் அல்லல்களை நன்றாக அறிந்தே அத்திருட்டை மோசடியைச் செய்கிறான். இதுபோல பிற சமூக விரோதச் செயல்களான விபச்சாரம் வரதட்சணை என அடுக்கிக்கொண்டே போகலாம். இவையனைத்தும் பகுத்தறிவு வழங்கப்பட்ட மனிதன்தான் செய்கிறான். மறுமைப் பலனை அவன் மறந்தே விடுகிறான். ஆனால் வல்ல அல்லாஹ் பகுத்தறிவு கொடுக்காமல் மிகச் சிறந்த நுண்ணறிவு ஒன்றை மனித ஜின்கள் தவிர பிற படைப்பினங்களுக்கு வழங்கியிருப்பதை நடைமுறையும் நபிமொழியும் நமக்குணர்த்துவதைக் காண்போம்.
அண்மையில் இந்தோனேஷியா இலங்கை தமிழகத்தைத் தாக்கிய சுனாமி என்ற பேரழிவு அதன் பாதிப்புகள் பற்றி செய்தி ஊடகங்கள் விலாவாரியாகக் கூறின. அச்செய்திகளில் ஒன்று: சென்னை மெரீனா கடற்கரை ஓரம் அதிகாலையில் உடற்பயிற்சிக்காக ஓடிக் கொண்டிருந்த கால்நடை மருத்துவர் ஒருவர் அங்கே மிரண்டு ஓடிக்கொண்டிருந்த ஒரு மாட்டைப் பின் தொடர அம்மாடு ஓடி நின்ற இடத்திலிருந்து சற்று அருகாமை வரையில் சுனாமி அலைகளின் பேரழிவு தாக்கியிருப்பதைக் கண்ட அக்கால்நடை மருத்துவர் செய்தி ஊடகங்களுக்கு பேட்டியளிக்கையில் மாடு-வின் உதவியால் தாம் உயிர் பிழைத்ததாகக் கூறினார். சுனாமி அலைகள் நம்மைத் தாக்க வருகின்றது அதன் எல்லை இங்கு வரையுள்ளது என்ற நுண்ணறிவை வல்ல அல்லாஹ் ஒரு மாட்டுக்கு வழங்கியிருப்பதையும் மனிதன் பகுத்தறிவு பெற்றவன் பரிதாபமாகப் பாதிக்கப் பட்டதையும் செய்தி ஊடகங்கள் வாயிலாக அறிகிறோம்.
அண்மையில் அண்டை நாடான பாகிஸ்தானில் நிகழ்ந்த பூகம்பம் ஏற்படுத்திய மிகப்பெருஞ் சேதாரங்களை விவரித்துக் கூறிய செய்தி ஊடகங்கள் ஒரு ருசிகரமான வியத்தகு உண்மையொன்றை கூறத் தவறவில்லை. அச்செய்தி இதுதான்:
பாகிஸ்தானின் தலைநகராகிய இஸ்லாமாபாத்தில் நிலநடுக்கம் நடந்த அவ்விடத்தையொட்டிய மரங்களின் மீதிருந்த பறவைகள் நிலநடுக்கம் நடப்பதற்கு சில நொடிகளுக்கு முன்பு அங்கிருந்து கூட்டம் கூட்டமாக இடப்பெயர்ச்சி செய்ததை அரப் நியூஸ் ஆங்கில நாளேடு குறிப்பிட்டிருந்தது. பகுத்தறிவு பெற்ற மனிதன் பெறாத இந்த நுண்ணறிவை படைத்த ரப்புல் ஆலமீன் பறவைகளுக்கு வழங்கியிருப்பதைக் கண்டு கொள்ளவில்லையா?. இச்செய்திகளை உறுதிப் படுத்தும் ஒருநபிமொழியைப் பாருங்கள்:
"ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போது, அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்தாக இருக்குமானால், என்னை விரைந்து எடுத்துச் செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால், கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும் மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஸயீத் அல்குத்ரி ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1314)
மற்றொரு ஹதீஸின் பிரகாரம்: "ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து முஹம்மத் எனும் இந்த மனிதரைப் - பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' எனக் கேட்பர். அதற்கவன் 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' என்பான். பிறகு '(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், 'எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' என்பான். அப்போது அவனிடம் 'நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கத்துவான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1338)
மற்றொரு அறிவிப்பில் மதீனா யூத மூதாட்டிகளில் இருவர் என்னிடம் வந்து (பேசிக் கொண்டிருந்தபோது) 'மண்ணறை வாசிகள் மண்ணறைகளில் வேதனை செய்யப்படுகின்றனர்' என்று கூறினர். அவர்கள் கூறியதை நம்புவது எனக்குச் சரியாகப் படவில்லை. பிறகு அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான், 'இறைத்தூதர் அவர்களே! இரண்டு மூதாட்டிகள் (என்னிடம் வந்து இப்படி இப்படிச் சொன்னார்கள்) என்று அவர்களிடம் தெரிவித்தேன்.அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'இருவரும் உண்மையே சொன்னார்கள். (மண்ணறையிலிருக்கும் பாவிகள்) கடுமையாக வேதனை செய்யப்படுகிறார்கள். அந்த வேதனை(யால் அவதியுறும் அவர்களின் அலறல்)தனை எல்லா மிருகங்களும் செவியேற்கின்றன" என்றார்கள். அதற்குப் பின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எல்லாத் தொழுகைகளிலும் மண்ணறையின் வேதனையிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோராமல் இருந்ததில்லை. (அறிவிப்பாளர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 6366)
அல்லாஹ்வின் நல்லடியார்களே வல்ல அல்லாஹ் அருள் மறையில் கூறிய படியும் உத்தம திரு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல் செயல் அங்கீகாரங்களின் படியும் அதற்குறிய வரையரைக்குள் சிந்தித்து நல்லறங்கள் புரிந்து நமது இம்மை மறுமை வாழ்வைச் செம்மைப் படுத்த வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக. ஆமீன்.
 

No comments:

Post a Comment