Pages

Saturday, March 19, 2011

நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (5)


[ மக்களே! அறிந்து கொள்ளுங்கள், இறுதி நாள் வரையிலும் ஒவ்வொரு ஜும்ஆத் தொழுகையையும் அல்லாஹ் உங்கள் மீது கடமை(ஃபர்ள்)யாக்கி விட்டான். ஆகவே, என் வாழ்நாளிலோ அல்லது எனக்குப் பிறகோ அதைக் கைவிடுபவனும், ஜும்ஆவைத் துச்சமாக நினைத்தோ அல்லது அறியாமையாலோ அதை நிராகரிப்பவனும் அல்லாஹ்விடம் சாந்தியைப் பெறமாட்டான். அவர்களின் கருமங்களில் (செயல்களில்) ‘பரகத்’ (அருள்) இருக்காது.
 எச்சரிக்கையாக இருங்கள்! ஜும்ஆவை விட்டவனுக்குத் தொழுகையும் இல்லை, நோன்புமில்லை, ஜகாத்துமில்லை, ஹஜ்ஜுமில்லை. அவன் செய்யும் நன்மையான காரியம் எதுவும் அல்லாஹ்வால் ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. ஆனால், அவன் தவ்பாச்செய்தால் (பாவமன்னிப்பு வேண்டினால்;) மன்னிப்புக் கிட்டலாம். தவ்பாச் செய்பவனின் (உண்மையான) தவ்பாவை அல்லாஹ் நிச்சயமாக ஏற்றுக்கொள்கிறான்.]
ஜும்ஆத் தொழுகை மக்காவிலேயே ஃபர்ளானது(கடமையானது)தான். எனினும், அச்சமயத்தில் மக்காவில் காஃபிர்களின் தொந்தரவு காரணமாக அங்கே அதைத் தொழ முடியாமலிருந்தது. பிறகு பனூஸாலிம் காபிலாவில் முதல் ஜும்ஆத் தொழுதபோது நிகழ்த்தப்பட்டதை முன்பு பார்த்தோம். அதற்குச் சிலநாட்களக்குப் பின் ஜும்ஆ விஷயமாக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிகழ்த்திய உரையாகும் இது. 
"எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே! நான் அவனிடமே உதவி தேடி, மேலும் (அவனிடமே) பாவமன்னிப்பைக் கோருகிறேன். நம் நஃப்ஸ{களால் விளையக்கூடிய தீமைகளைவிட்டும் அல்லாஹ்விடமே கார்மானம் தேடுவோம். அல்லாஹ்வால் நேர்வழி காட்டப்பட்டவர்களை எவராலும் வழிகெடுக்க முடியாது. மேலும், அல்லாஹ்வே வழிதவறுமாறு செய்துவிட்டவர்களை எவராலும் நேர்வழியில் திருப்பிவிட முடியாது. வணக்கத்துக்குரிய இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன். அவன் தனித்தவன், இணையற்றவன், நிச்சயமாக முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அல்லாஹ்வின் அடியாராகவும், அவனது தூதருமாய் இருக்கிறார் என்றும் உறுதி கூறுகிறேன். அவருக்கு அல்லாஹ் சன்மார்க்கத்தை அருளி, நன்மாராயம் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும், உலக முடிவின் அன்மையில் அனுப்பியுள்ளான்.
மக்களே! அல்லாஹ்வின், அவன் ரஸ_லின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தவர்களே நேர்வழிப் பெற்றவர்களாவர். அவர்களுக்குக் கீழ்ப்படியாமல் பகைத்துக் கொண்டவர்கள் தங்களைத்தவிர வேறு யாருக்கும் நஷ்டத்தை உண்டாக்கியவர்களல்லர். அதனால் அல்லாஹ்வுக்கு நஷ்டம் விளைந்துவிடாது.
எச்சரிக்கையாக இருங்கள்!
எல்லாவற்றிலும் மேலான உபதேசம் அல்லாஹ்வின் திருவேதமேயாகும்.
மேலான பாதை முஹம்மதின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பாதையேயாகும்.
செயல்களில் மிக மிகத் தீமையானது சன்மார்க்கத்தில் (தீனில்) புதிதாக (பித்அத்;) எதையும் உண்டுபண்ணுவதாகும்.
தீனில் புதிதாக உண்டுபண்ணும் செயல்கள் அனைத்தும் வழிகேடானவையாகும்.
மக்களே! நீங்கள் மரணிக்கும் முன்பே பாவமன்னிப்பு (தவ்பா) செய்து விடுங்கள். நல் அமல்கள் (நற்கருமங்கள்) செய்யும் சந்தர்ப்பம் கிடைக்காத ஒரு நேரம் வரும் முன்னமேயே நல் அமல்களைப் புரியுங்கள். அல்லாஹ்வை அதிகமாகத் தியானிப்பதன் மூலமும், அந்தரங்கமாகவும், பகிரங்கமாகவும் தான தருமங்களை அதிகம் செய்வதன் மூலமும் அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையில் இருக்கும் (புனிதமான) தொடர்பை உறுதியாக்கிக் கொள்ளுங்கள். அவ்வாறாயின், உங்களுக்கு (அவனால்) உணவளிக்கப்படும். மேலும், உங்களுக்கு உதவி தரப்பட்டு உங்கள் நஷ்டங்களுக்கு ஈடு செய்யப்படும்.
மக்களே! அறிந்து கொள்ளுங்கள், இறுதி நாள் வரையிலும் ஒவ்வொரு ஜும்ஆத் தொழுகையையும் அல்லாஹ் உங்கள் மீது கடமை(ஃபர்ள்)யாக்கி விட்டான். ஆகவே, என் வாழ்நாளிலோ அல்லது எனக்குப் பிறகோ அதைக் கைவிடுபவனும், ஜும்ஆவைத் துச்சமாக நினைத்தோ அல்லது அறியாமையாலோ அதை நிராகரிப்பவனும் அல்லாஹ்விடம் சாந்தியைப் பெறமாட்டான். அவர்களின் கருமங்களில் (செயல்களில்) ‘பரகத்’ (அருள்) இருக்காது.
எச்சரிக்கையாக இருங்கள்! ஜும்ஆவை விட்டவனுக்குத் தொழுகையும் இல்லை, நோன்புமில்லை, ஜகாத்துமில்லை, ஹஜ்ஜுமில்லை. அவன் செய்யும் நன்மையான காரியம் எதுவும் அல்லாஹ்வால் ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. ஆனால், அவன் தவ்பாச்செய்தால் (பாவமன்னிப்பு வேண்டினால்;) மன்னிப்புக் கிட்டலாம். தவ்பாச் செய்பவனின் (உண்மையான) தவ்பாவை அல்லாஹ் நிச்சயமாக ஏற்றுக்கொள்கிறான்.
எச்சரிக்கை! பெண்கள் ஆண்களுக்கு ‘இமாமத் (தொழுகையை முன்னின்று நடத்துதல்) செய்ய வேண்டாம். ஓர் அஃராபி (நாடோடி அரபி) முஹாஜிர்களுக்கு இமாமத் செய்ய வேண்டாம்! ஒரு பாவி நல்ல முஃமீனுக்கு இமாமத் செய்ய வேண்டாம்! ஆனால், ஆட்சியாளர் தனது வாளையோ, சட்டையையோ காட்டி அவர்களை (பாவியையோ, பெண்ணையோ, அஃராபியையோ) நிர்பந்தித்தால் மட்டும் இமாமத் செய்யலாம்.
அல்லாஹ் மனிதர்களின் இதயங்களை முத்திரையிட்டுத் திறக்காமல் ஆக்கினாலொழிய அவர்கள் ஜும்ஆவை ஒருக்காலமும் தொழாமல் இருக்க மாட்டார்கள். அவ்வாறு விட்டால், அவர்கள் பொடுபோக்கான சோம்பேரிகளின் கூட்டத்தில் சேர்ந்தவர்களாவார்கள்."
இன்ஷா அல்லாஹ், சொற்பொழிவுகள் தொடரும்....

No comments:

Post a Comment